சிஸ்டம் எவ்வளவு சரியில்லை என்று தெரியுமா..???

Views
சிஸ்டம் சரியில்லைதான். ஆனால் அது எவ்வளவு சரியில்லை என்று தெரியுமா..?

சம்பவம் 1:

குப்பைகளை எடுக்கும் மாநகராட்சி தொழிலாளர்களின் உடையில் எழுதியிருந்த "குப்பைகளை வீடுகளிலேயே தரம் பிரியுங்கள்" என்ற வாசகத்தை கண்டு... அப்படி பிரிக்காமல் மக்கும் குப்பை மற்றும் (பிளாஸ்டிக் போன்ற) மக்கா குப்பை என்று அனைத்தையும் நாம் சேர்த்தே போடுவதால் அதனை பின்னால் பிரிப்பவர்களுக்கு ஏற்படும் சிரமமும், அதனால் அரசுக்கும், பூமிக்கும் ஏற்படும் நஷ்டங்களை எல்லாம் கவனத்தில் கொண்டு அவ்வாசகத்தை கண்ட அன்றே மனைவி, மக்களை அழைத்து தரம் பிரிப்பதன் தேவைகளை வலியுறித்தி இரண்டு குப்பை கூடைகளை (Dust bins) வைத்து அதனை வீட்டில் செயல்படுத்தி விட்டோம். 



பிள்ளைகளும், நாங்களும் ஆர்வமாக குப்பைகளை போடும்போதே தரம் பிரித்து போட்டு வந்து.. குப்பை வண்டி வந்ததும், அவர்களிடம் இரண்டு கூடைகளையும் கொண்டு போய் கொடுத்தால்.. அதனை இரண்டையும் வாங்கி வண்டியில் ஒரே குப்பையில் போடுகிறார்கள்.. ஏன் என்று கேட்டால்.. அப்படி தரம் பிரித்து வாங்கும் வண்டி FC க்கு சென்றுள்ளதாம்.. அது வரும் வரை இவ்வண்டியில் தான் வாங்குவார்களாம்.   

சரி.. அந்த வண்டி வந்ததா..? தரம் பிரிக்கப்பட்ட குப்பைகளை வாங்கினார்களா..??

நாங்கள் அப்படி தரம் பிரித்து குப்பைகளை சேகரிக்க தொடங்கியது 31st Dec 2018 அன்று... இன்றோடு (14th June 2019) ஆறு மாதங்கள் கழிந்து விட்டது.. இதுவரை FC க்கு போன அந்த வண்டி வரவே இல்லை.. 😃 இதுவரை நாங்கள் வீட்டில் தரம் பிரித்து சேகரிக்கும் குப்பைகளை வாங்கி வண்டியில் ஒரே குப்பையில் தான் போட்டுக் கொண்டிருக்கிறார்கள் மாநகராட்சியின் தொழிலார்கள் இங்கே!! 

இதை என்னவென்று சொல்ல..!!!

ஆக.. மக்கள் மாறினாலும்.. சிஸ்டங்கள் மாறுவதில்லை..!!!  :-(

புகார் அளிக்கலாமே என்று சிலர் கேட்கலாம்.. அந்த புகார் அளிக்கும் சிஸ்டத்தின் நிலையைப் பற்றியது தான் அடுத்த சமபவம்!

சம்பவம் 2:

கோவைக்கு புதிய மாநகராட்ச்சி ஆணையராக (Corporation Commissioner) பதவி ஏற்றிருப்பவர் ஒரு இளம் வயது IAS அதிகாரி, பெயர் சரவண குமார்.  அவர் பதவி ஏற்றதும் அளித்த பேட்டியில் Greivances களுக்கு அதாவது குடிமக்களின் புகார்களுக்கு முன்னரிமை அளிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.  மகிழ்வாக இருந்தது.

கீழே உள்ள இந்த கனொளியைப் பாருங்கள்.  



இது நான் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் அருகே உள்ள ரோட்டில் கசிந்து சாக்கடையில் கலந்து வீணாகிக் கொண்டிருக்கும் குடிநீர்.  எவ்வளவு வேகமாக போகிறது என்று கவனியுங்கள். இதே போல் இந்த சாலை முடியும் இன்னொரு இடத்திலும் இப்படி கசிந்து கொண்டிருக்கும். எங்கள் பகுதியில் வாரம் ஒருமுறை அல்லது பத்து நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விடப்படும்.  வந்தால்.. மூன்று நாட்களுக்கு தொடர்ந்து விடுவார்கள்.  ஆகையால் அந்த மூன்று நாட்களும்.. இரவு பகலாக இருபத்து நான்கு மணி நேரங்களும்.. அதாவது 3 X 24 hours இந்த குடிநீர் இப்படி வீணாக, அதுவும் இவ்வளவு வேகமாக சாக்கடையில் கலந்து கொண்டிருக்கும். இன்னும் சொல்லப் போனால் அந்த மூன்று நாட்களும் வீணாகும் இந்த நீர் இருந்தால் அது எங்கள் தெருவிற்க்கே ஒரு வாரத்திற்கு தேவையான குடிநீரை தந்து விடும். அருகில் குடியிருக்கும் எங்களுக்கு இதனை பார்ப்பதற்கு எப்படி இருக்கும்..?  இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால் இந்த நீர் இப்படி கசிந்து சாக்கடையில் கலந்து கொண்டிருக்கும் "சல சல" என்ற சத்தம் வீட்டில் இருக்கும் எங்கள் காதுகளில் இந்த மூன்று நாட்களும் தொடர்ந்து விழுந்து அது "இப்படி வீணாகிறதே.." என்ற மன உளைச்சலை வேறு தந்து கொண்டிருக்கும்.  

இதற்காக நடவடிக்கை எடுக்க நினைத்தபோது.. எனக்கு புதிய ஆணையர் தந்த பேட்டி நியாபகம் வரவே.. கோவை மாநகராட்சியின் வலைத்தளம் சென்று தேடிய போது அங்கே இது போன்ற புகார்கள் அளிக்க ஒரு வசதி (feature) இருந்தது. ஆனால்.. அங்கே புகார் தந்தால்.. எங்கள் பகுதியில் இருக்கும் குடிநீர் வாரியத்தில் புகார் தந்தீர்களா என்று கேட்பார்கள் என்றெண்ணி.. அந்த வசதியை பயன்படுத்தாமல் அருகில் இருக்கும் குடிநீர் வாரியம் சென்று முதலில் புகார் செய்தேன். அவர்கள் அதனை ஒரு புகார் புத்தகத்தில் கூட பதிவு செய்யவில்லை. வெளியே உட்கார்ந்திருந்த பழுது சரிக்கும் அலுவலர்களிடம் போய் தெரிவிக்க சொன்னார்கள். அவர்களிடம் போய் சொன்னேன்.  

"எல்லாம் பிரைவேட் காரங்க கிட்ட கொடுத்துட்டு.. வேலை செய்யறதுக்கு ஆளே இல்லை.. என்ன செய்ய..?" என்றார்கள். 

"ரொம்ப பெரிய ஃப்ளோவ்ல போயிட்டு இருக்கு.. பார்க்கறதுக்கு வலிக்குது.." ன்னேன்.  என் வலி புரிந்தால் நடவடிக்கை எடுக்க வருவார்கள் என்ற நம்பிக்கையில்.  

"சரி உங்கள் நம்பர் கொடுங்க.. வருகிறோம்.." என்றார்கள்.

அவர்கள் எண்ணையும் வாங்கிக் கொண்டேன். ஸோ.. இது வெறும் வாய் வழி புகாரகத்தான் பதிவு செய்யப்பட்டது. எந்த ஒரு புகார் புத்தகத்திலும் அவர்கள் பதிவு செய்யவில்லை.    அதனால் எனக்கு உறுதியாக தெரிந்தது  நிச்சயம் இவர்கள் எதுவும் செய்யமாட்டார்கள் என்று.  அதே தான் நடந்தது.  

ஒரு இரண்டொரு நாட்கள் கழித்து  மாநகராட்சி வலைதளத்தில் உள்ள grievance வசதியில் சென்று புகார் பதிவு செய்தேன். 

Greivance system.. அதாவது புகார் அளிக்கும் வசதி எல்லாம் நன்றாகத்தான் உள்ளது..? ஆனால்.. செயல்பாடு..???

மார்ச் 12ம் தேதி புகார் செய்தேன்.  அது அன்றே சிஸ்டத்தால்  ஒரு உதவி பொறியாளருக்கு ஒதுக்கப்பட்டது (automatic assignment by CCMC BOT). 

மார்ச் 19 தேதி 11:27 மணி வாக்கில் "Work started" என்று ஒரு நிலைத்தகவலையும் (status), உடனேயே, அதாவது அதே நேரத்தில் "Work completed" ஒரு  நிலைத்தகவலையும், விளக்கத்தில் (Comments) "attended" என்றும் கூறி என்னுடைய புகாரை நிறைவு செய்து அப்டேட்டே செய்து விட்டார் அந்த பொறியாளர்.  அதாவது இது தொடர்பாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமலேயே "Work completed" என்று அப்டேட் செய்துவிட்டார்கள்.  (பக்கத்து சாலையில் இன்னொரு லீக் இருந்தது.. அதனை அப்போதுதான் அடைத்திருந்தார்கள். ஒரு வேளை அந்த லீக்கைத்தான் நான் புகார் அளித்துள்ளேன் என்று நினைத்து இப்புகாரை மூடியிருக்கலாம் என்பது என் யூகம். இருந்தாலும் புகார் அளித்தவரிடம் சரிபார்க்காமல் இப்படி யூகத்தின் அடிப்படையில் மூடுவது எவ்வளவு தவறு..??   )

அன்றே எனக்கு என்னுடைய புகார் நிறைவு செய்யப்பட்டதாக CMCன் சிஸ்டத்திலிருந்து ஒரு SMSம் அனுப்பட்டுள்ளது. 

இந்தியாவில் ஒரு நாளைக்கு எத்தனையோ SMSகள் வருகிறது.. ஒவ்வொன்றையும் யாரும் படிப்பதில்லை. ஆகையால் அந்த SMS ஐ நான் கவனிக்கவில்லை. அதனால் அவர்கள் என் புகாரை இப்படி மூடியது எனக்கு தெரியாது.


ஆனால்.. இப்படி பத்து நாட்களுக்கு ஒரு முறை தொடர்ந்து மூன்று நாட்கள் குடிநீர் வீணாகிக் கொண்டு இருப்பதை காணும்போதெல்லாம் கவலையும், கோபமும், ஆற்றாமையும் மாறி மாறி வந்து கொண்டு இருந்ததால்.. சரி, அந்த புகார் என்னதான் ஆனது என்று நான் மே மாதம்,  இரண்டாம் தேதி வாக்கில் மீண்டும் CCMC ன் வலைதளத்தில் சென்று நோக்கியபோது தான் அவர்கள் இப்படி புகாரை நிறைவு செய்திருந்தது தெரிந்தது. 

எப்படி இருக்கும் நமக்கு...?

நல்ல வேளையாக.. அந்த சிஸ்டத்தில் நிறைவு செய்யப்பட்ட புகார்களுக்கு புகார் அளித்தவர்களின் மறுமொழி (feedback) கேட்கும் வசதி இருந்தது.  (வாழ்க.. மென்பொருள் பொறியாளர்கள்..!! ;-) )

உடனே.. அந்த புகாரை மீண்டும் திறந்து (Re-open).. விளக்கம் அளிக்க வேண்டிய இடத்தில் கொஞ்சம் ஸ்ட்ராங்காக பதில் அளிக்க கேபிடல் எழுத்துகளில் பதில் அளித்தேன். 

"THIS ISSUE IS NOT DONE AND NOT COMPLETED. SOLVE IMMEDIATELY. "

அன்றே அப்புகார் மீண்டும் அதே பொறியாளருக்கு ஒதுக்கப்பட்டது. இம்முறை ஒதுக்கியது சிஸ்டம் அல்ல.. CCMC அட்மின். ("அட்மின்" என்றவுடன்.. உடனே யாரும் டென்சன் ஆக வேண்டாம். இது ஒரு பொறுப்பான அட்மின். ;-P )

மே 31 - அதாவது கிட்டத்தட்ட 29 நாட்களுக்கு பின் - Work started என்ற ஸ்டேடஸ் வருகிறது. 

ஜூன் 12 - அன்று வந்து பார்த்து ஆய்வு செய்து தேவையான நடவடிக்கை எடுத்தனர்.  படங்கள் கீழே. 




ஆக.. ஒரு புகாரின் மீது நடவடிக்கை எடுக்க கோவை மாநகராட்சிக்கு தேவையான காலம் ஒன்னரை மாதங்கள். நிறைவு செய்தது தெரியாததனால் சரி பார்க்க நான் எடுத்துக் கொண்ட ஒன்னரை மாதத்தையும் சேர்த்தால் மொத்தம்  மூன்று மாதங்கள். 

இந்த மூன்று மாதத்தில் எத்தனை கன அடி குடிநீர் வீணாகி இருக்கும் என்று நீங்களே யூகித்துக் கொள்ளலாம்.

சில மாதங்களுக்கு முன்னாள் அருகில் உள்ள ஒரு மருந்தகம் சென்றபோது அதன் முன்னாள் உள்ள சாலையிலும் இப்படி குடிநீர் கசிந்து போய்க் கொண்டிருப்பதைக் கண்டு.. "சார்.. இப்படி வேஸ்ட் ஆகிட்டிருக்கே.. கம்ப்ளைன்ட் பண்ணுங்க.." என்றேன்.."எப்பவோ கம்ப்ளைன்ட் பண்ணியாச்சு சார்.. ஒரு வருசமா இப்படித்தான் போயிட்டு இருக்கு.." என்றார். :-( :-( 

மாநிலம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் தலை விரித்து ஆடும் இன்றைய இக்கட்டான காலகட்டத்தில், உலகெங்கிலும் தண்ணீர் பற்றாக்குறை பெருகிக் கொண்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில் இப்படி குடிநீரை யாருக்கும் பயனில்லாமல் வீணாக்குவது என்பது எவ்வளவு பெரிய குற்றம்..!!!

பொது மக்களும் நமக்கென்ன என்று இருக்கமால் இது போன்ற புகார்களை உடனுக்குடன் அளிப்பதும், அரசாங்கமும், மாவட்ட நிர்வாகங்களும் இது போன்ற உயிர்-நிலை விடயங்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பதும் காலத்தின் கட்டாயமல்லவா..??

கோவை மாநகராட்சியின் Greivance சிஸ்டம் நல்ல சிஸ்டம் தான்.. நல்ல முயற்சி தான். ஆனால் அதில் உள்ள முக்கிய குறைகளாக நான் காணுவது.. புகார் அளித்தவரிடம் சரி பார்த்துவிட்டு வேலையை தொடங்குவது இல்லாததும், புகார் நிறைவு செய்துவிட்டதை கூற வெறும் SMSஓடு நின்று விடாமல் புகார் அளித்தவரை போனில் அழைத்து நேரடியாக தெரிவிப்பது இல்லாததும்.

நிற்க..

இப்பதிவின் நோக்கம் அரசுகளின் புகார் அளிக்கும் வசதிகளின் நவீனமயமாக்கலை குறை கூறி அவைகளை பயன்படுத்துவதை தடுத்து நிறுத்துவது அல்ல.. அவைகளின் செயற்படுத்துகையில் (Implementation) உள்ள சில குறைகளை எடுத்துரைப்பதே ஆகும். 

புகார் அளிப்பதற்கு என்று ஒவ்வொரு வாரியமாக அலைந்து, திரிந்து, காத்திருந்து, ஏச்சும், பேச்சும் எல்லாம் வாங்கி வருவதெல்லாம் விட.. இந்த சிஸ்டங்கள் நீங்கள் இருந்த இடத்தில், நினைத்த நேரத்தில் புகார்கள் அளிக்கும் வசதிகளை ஏற்படுத்தி தருகிறது என்பதும், அவைகளை மக்கள் அதிகம் பயன்படுத்தி புகார்களை களைய வேண்டும் என்பதிலும் மாற்றுக் கருத்தே இல்லை..!  எங்கள்  அருகில் இருந்த குடிநீர் வீணாகுதல் பிரச்சினை ஒருவழியாக தீர்ந்ததிலும் எனக்கு மிக்க மகிச்சி. 

ஆனால்.. அரசு நிர்வாகங்கள் தங்களுடைய சேவைகளுக்கு புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்துதல் மட்டும் முக்கியமல்ல.. அது சரியாக முறையில் பயன் அளிக்கிறதா என்று கண்காணித்தலும், தேவையான முன்னேற்றங்களும் செய்தால் தான் அவைகளின் உண்மையான பயனை அடைய முடியும்.

அதுவரை அரசுகள் எத்தனை "நவீன சிஸ்டங்கள்" கொண்டு வந்தாலும்.. அவைகளால் "நம் சிஸ்டம் சரியில்லை" என்ற குற்றச்சாட்டை போக்கவே முடியாது..!!! 



Comments

  1. எங்கள் பகுதியில் இது போன்ற பிரச்சினை களுக்கு, நகராட்சி கவுன்சிலர் தான் இலக்கு. நல்ல மனிதன்; உடனடியாக முடித்துக் கொடுத்து விடுவார். இப்போது அதற்கும் வழி இல்லாதது தான் வருத்தம்.

    ReplyDelete
    Replies
    1. நல்ல கவுன்சிலர்கள் கிடைப்பது வரம். மீண்டும் அது போன்ற கவுன்சிலர்கள் உங்களுக்கும், நம் அனைவருக்கும் கிடைக்க இறைவன் உதவி செய்வானாக.

      Delete
  2. Super Blog. Nalla Vizhipunarvu padhivu

    ReplyDelete
  3. Boss system needs money to do work..If you have passed a 2000, job would have finished in a day.

    இங்க எல்லாமே பணம் பாஸ்...


    Gopal

    ReplyDelete

Post a Comment

உங்கள் கருத்துகள்..

Popular posts from this blog

கொரானா வந்து வீட்டில் தனிமைப்படுத்துதல் - சில அனுபவக் குறிப்புகள்...

நம்ம வீட்டுப் பிள்ளை

தவறான முன்னுதாரணம்..!